மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு எதிரான வழக்கு: நேரில் ஆஜராவதில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது வெறுப்பு பேச்சு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது. அதேவேளை, விசாரணையின் ஒரு பகுதியாக வரும் 14-ந்தேதி விசாரணை அதிகாரி முன்பு மஹுவா மொய்த்ரா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மஹுவா மொய்த்ரா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மஹுவா மொய்த்ரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.ஆனால், கொல்கத்தா ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்தது. இதையடுத்து, மஹுவா மொய்த்ராவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.