நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்; தமிழ்நாடு அரசு உத்தரவு
மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அவரை நில நிர்வாக ஆணையராக நியமித்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசுத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐ.ஏ.எஸ். (பணியிட ஒதுக்கீடு) விதிகள், 1954-இன் விதி 4(2)-ன் அடிப்படையில், 'கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், நில நிர்வாகம்' என்ற தற்காலிகப் பதவி உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பதவி, அதிகாரி பொறுப்பேற்கும் நாளிலிருந்து ஒரு ஆண்டு காலம் அல்லது அந்தப் பதவியின் தேவை முடிவடையும் நாள் வரை, இதில் எது முதலில் நிகழுகிறதோ அதுவரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், மத்திய அரசுப் பணியில் இருந்து திரும்பும் ராஜேஷ் லக்கானி, ஏற்கனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆர்.
கஜலட்சுமிக்கு பதிலாக, புதிதாக உருவாக்கப்பட்ட கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர், நில நிர்வாகம் என்ற பதவியில் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், ஐ.ஏ.எஸ். (ஊதியம்) விதிகள், 2016-இன் விதி 12(1)-ன் கீழ், இந்தப் பதவிக்கு தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான அந்தஸ்தும் பொறுப்புகளும் வழங்கப்படும் என்றும் அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.1992-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழக அரசுப் பணியில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.