தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட மோதல்: டைல்ஸ் தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொலைச் சம்பவமாக மாறி, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமத்தின் மேற்கு தெருவைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் மலைராஜ் (30) திருமணம் ஆகாதவர். டைல்ஸ் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், நேற்று இரவு தனது மூன்று நண்பர்களுடன் கிராமம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தகராறாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த மூவரும் தங்களிடம் இருந்த அரிவாளால் மலைராஜை பலமுறை வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மலைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தாக்குதல் நடத்திய மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இரவு முழுவதும் வீட்டிற்கு திரும்பாத மகனைத் தேடி இன்று காலை சென்ற தந்தை மாரியப்பன், காட்டுப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் மலைராஜ் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார், மலைராஜின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.