தூத்துக்குடியில் பன்றி இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் பன்றி இறைச்சி வியாபாரி சேகர் (40) கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர், திரேஸ்நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (வயது 40). இவர் மாதாநகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த 13-ம் தேதி இரவு, மாதாநகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர். குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் என சேகர் அவர்களை வழிமறித்துக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.தாக்குதலுக்குள்ளான வாலிபர், சிறிது நேரத்தில் தனது நண்பர்களுடன் பத்ரகாளியம்மன் கோவில் பகுதிக்கு வந்துள்ளார்.
அங்கு நின்று கொண்டிருந்த சேகரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூலை நேற்று காலையில் சேகர் உயிரிழந்தார்.... போலீசார் நடத்திய விசாரணையில், குற்றச்சம்பவத்திற்கு முன்பு அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற சிலரை சேகர் கண்டித்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியதாகவும் தெரியவந்துள்ளது.இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.