துபாயில் மூளைச்சாவு அடைந்த இந்தியப் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்; 3 பேருக்கு புதிய வாழ்வு
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த 29 வயதான ஜோவிதா டிசோசா, இளங்கலை மருந்தியல் படிப்பையும், மார்க்கெட்டிங் துறையில் முதுகலைப் படிப்பையும் முடித்திருந்தார். பின்னர் அவர் துபாயில் குடியேறி, அங்குள்ள அல் ஜலீலா அறக்கட்டளையில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.இந்த நிலையில், ஜோவிதாவுக்கு திடீரென மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் நினைவை இழந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, ஜோவிதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, அமீரகத்தின் தேசிய உறுப்பு தானத் திட்டமான 'ஹயாத்' மூலம் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.இதுகுறித்து ஜோவிதாவின் பெற்றோர் கூறுகையில், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜோவிதா எப்போதும் சமூகச் சேவையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தனர். அவரது விருப்பத்துக்கு ஏற்ப, தானமாக வழங்கப்பட்ட உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு, மூன்று நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.