திருமணம் நிச்சயமான வங்கி ஊழியர்கள் அடுத்தடுத்து தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம் பூச்சக்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரன்-ரீனா தம்பதியரின் மூத்த மகளான அனுஸ்ரீ (25), கர்நாடக மாநிலம் ஹூன்சூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தார். பணியின் காரணமாக அவர் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார்.இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் இரிட்டி அருகே உள்ள அம்பலத்தட்டு பகுதியைச் சேர்ந்த சுதாகரனின் மகன் அமல் (27) என்பவருடன் அனுஸ்ரீக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமல் எர்ணாகுளத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தார். இருவரின் திருமணம் வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. திருமண நிச்சயத்திற்குப் பிறகு இருவரும் செல்போன் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தனர்.கடந்த வாரம் அனுஸ்ரீ மற்றும் அமல் இருவரும் கண்ணூரில் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் தங்களது பணியிடங்களுக்குச் சென்றுள்ளனர். கடந்த 11-ஆம் தேதி வங்கியில் பணிபுரிந்த அனுஸ்ரீ, தனது சகோதரியுடனும் தொலைபேசியில் பேசியுள்ளார். பின்னர் இரவில் அவர் தங்கியிருந்த விடுதி அறைக்குச் சென்றுள்ளார்.
இதற்குப் பிறகு, அனுஸ்ரீயை அவரது குடும்பத்தினர் பலமுறை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அருகில் வசிப்பவர்களிடம் தகவல் தெரிவித்து விடுதிக்குச் சென்று பார்க்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அப்போது, விடுதி அறையில் அனுஸ்ரீ தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இந்த தகவலை அறிந்த அமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.வருங்கால மனைவியின் உயிரிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், எர்ணாகுளத்தில் தங்கியிருந்த விடுதியிலேயே அமலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த எர்ணாகுளம் வடக்கு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கேரளா மற்றும் கர்நாடக மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண்ணும், இளைஞரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.