தலைப்பு: சென்னை: ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்ததாக 24 வயது இளைஞர் கைது
சென்னையில் பேசின்பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் ரெயில்களில் பயணம் செய்தவர்களிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தண்டவாளத்தின் ஓரத்தில் நின்று, குச்சியால் பயணிகளை தாக்கிய பின்னர் அவர்களது செல்போன்களை பறித்து தப்பிச் செல்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவங்களில் தொடர்புடையதாகக் கூறப்படும் 24 வயதான ஹரி பாபுவை கைது செய்தனர்.போலீசார் தெரிவித்ததாவது, கைது செய்யப்பட்ட ஹரி பாபு மீது ஏற்கனவே 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.