தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு தாக்குதல்; ஆந்திராவைச் சேர்ந்த 4 பக்தர்கள் மயக்கம்
தஞ்சாவூர் உலகப் புகழ்பெற்ற பெரிய கோவிலில் இன்று நடைபெற்ற விசேஷ யாகத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. யாகக் குண்டத்தில் இருந்து வெளியான அடர்ந்த புகை, அருகிலிருந்த மரத்தில் அமைந்திருந்த கதண்டு கூட்டை தாக்கியதால், அவை திடீரென சிதறி பறந்து பக்தர்களை கொட்டின.அந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்கள் மீது கதண்டுகள் தாக்குதல் நடத்தியதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மயங்கி விழுந்தனர்.சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மயங்கிய பக்தர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தச் சம்பவத்தையடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து கதண்டு கூட்டை முழுமையாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.