சொத்துவரி முறைகேடு வழக்கில் தி.மு.க.,வினரை சேர்க்க சட்டத்தை தவறாக பயன்படுத்தும் அமைச்சர் நிர்மல்குமார் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., குற்றச்சாட்டு
மதுரை: மதுரையில் சொத்துவரி முறைகேடு வழக்கில் சட்டத்தை தவறாக பயன்படுத்தி தி.மு.க.,வினர் பலரை சேர்க்க போலீசார், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் நிர்மல்குமார் நெருக்கடி கொடுக்கிறார் என மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., குற்றம்சாட்டியது.
துணைமேயர் நாகராஜன், கமிஷனர் கவுரவ்குமார் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க., கவுன்சிலர்கள் குழு தலைவர் ஜெயராம் பேசியதாவது:
சொத்துவரி முறைகேடு வழக்கு தொடர்பாக ஜூலை 3ல் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரத்தை வெளியிட வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் அதை வெளியே சொல்ல முடியாது என துணைமேயர் குறிப்பிடுகிறார்.
அப்படியென்றால் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, அமைச்சர் நிர்மல் குமார், மாநகராட்சி எதிர் கட்சித் தலைவர் சோலைராஜா உள்ளிட்டோர் ரூ.200 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வெளிப்படையாக கூறுகின்றனர். 8 ஆண்டுகள் தி.மு.க., கூட்டணியில் இருந்த எம்.பி., வெங்கடேசனும் குற்றம்சாட்டுகிறார். ரூ.200 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததற்கான என்ன ஆதாரம் உள்ளது.
தவறு செய்யாத தி.மு.க., கவுன்சிலர்களையும் சொத்துவரி முறைகேடு வழக்கில் சேர்க்க சொல்லி, சட்டத்தை தவறாக பயன்படுத்தி, சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நெருக்கடி கொடுக்கிறார்.
இது தி.மு.க.,வின் மானப்பிரச்னை.
தவறு செய்யாதவர்களை இந்த வழக்கில் சேர்த்து பழிவாங்கினால் நீதிமன்றத்திற்கு செல்வோம். இவ்வாறு கூறினார்.
கூட்டத்திற்கு பின் ஜெயராம் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த கூட்டத்தில், சொத்துவரி முறைகேட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்தால் அதை நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமாருக்கு சவால் விட்டோம். தற்போது வரை அவரிடமிருந்து சரியான பதில் இல்லை. போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தபாலில், 'ரூ.200 கோடி ஊழல் என்பது முழுக்க பொய்யாக பரப்பப்பட்ட அவதுாறு அரசியல். வெறும் ரூ.1.70 கோடி மட்டுமே ஊழல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் 100 கவுன்சிலர்களும் சொத்து பட்டியல் வெளியிட வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். அப்படியானால் த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிக்கும் காங்., வி.சி., கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., கவுன்சிலர்களையும் திருடர்கள் என கூறுகிறாரா. தி.மு.க., கவுன்சிலர்கள் சொத்துப்பட்டியல் வெளியிட தயாராக உள்ளோம்.
இவ்வாறு கூறினார்.