சென்னையில் நள்ளிரவில் பலத்த மழை; 15 விமானங்கள் தாமதமாக இயக்கம்
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பாதையின் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாலை முதல் இரவு வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று மாலை தொடங்கி நகரின் பல பகுதிகளில் இடைவிடாமல் மழை பதிவானது.அடையாறு, மயிலாப்பூர், தாம்பரம், பெருங்குடி, தரமணி, கிண்டி, வேளச்சேரி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து, நகரம் முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.மீனம்பாக்கம் பகுதியில் பெய்த கனமழையின் தாக்கம் சென்னை விமான நிலைய சேவையையும் பாதித்தது.
இதன் காரணமாக மொத்தம் 15 விமானங்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது. அபுதாபி, டெல்லி, கவுகாத்தி, கோவை, திருச்சி மற்றும் மும்பையில் இருந்து வந்த விமானங்கள் உடனடியாக தரையிறங்க முடியாததால், சில நேரம் வானில் சுற்றிவிட்டு பின்னர் தரையிறக்கப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு, மும்பை, அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாக புறப்பட்டன.இதற்கிடையே, இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.