ஒரு மாதமாக அதிகரித்து வந்த மஞ்சள் விலை திடீர் சரிவு: என்ன காரணம்?
ஒரு மாதமாக தொடர்ந்து உயர்ந்து வந்த மஞ்சள் விலை தற்போது திடீரென குறைந்துள்ளது. ஈரோட்டில் செயல்படும் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சள், கொப்பரை, நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.கடந்த ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில், விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் (100 கிலோ) தரத்தைப் பொறுத்து ரூ.11,206 முதல் ரூ.14,269 வரை விற்பனையானது. அதேபோல், கிழங்கு மஞ்சள் ரூ.10,429 முதல் ரூ.13,140 வரை விலை பெற்றது.இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி மஞ்சள் விலை உச்சத்தை எட்டியது. அப்போது விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.12,967 முதல் ரூ.19,779 வரை விற்பனையானது. ஒரே மாதத்தில் சுமார் ரூ.4,500 வரை விலை உயர்ந்த நிலையில், தற்போது அதில் சுமார் ரூ.2,000 வரை சரிவு ஏற்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற ஏலத்தில், விரலி மஞ்சள் ரூ.11,329 முதல் ரூ.18,311 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.10,869 முதல் ரூ.16,616 வரையும் விற்பனையானது.இந்த விலைச் சரிவு குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் விளக்கமளிக்கையில், கடந்த மாதம் மஞ்சளுக்கான தேவை அதிகரித்ததுடன், சந்தைக்கு வந்த அளவு குறைவாக இருந்ததால் விலை உயர்ந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, கையிருப்பில் வைத்திருந்த மஞ்சளை விவசாயிகள் அதிக அளவில் சந்தைக்கு கொண்டு வந்ததாகவும், தற்போது நாடு முழுவதும் பல்வேறு சந்தைகளில் மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.