செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது நடவடிக்கை எடுக்கப்படுமா?
செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தங்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் முழுமையாக கடைப்பிடிக்கத் தயாராக இருப்பதாகவும் மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வெளிப்படையாக கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, தங்களை ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். குதிரை பேர வழக்கில் காவலில் வைத்து விசாரிக்க தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்த போதிலும், தொடர்ந்து சோதனைகள் நடைபெறுவதாகவும், சட்டப்படி நடைபெறும் விசாரணைக்கு எந்தவித தடையும் ஏற்படுத்தவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.மேலும், காவல்துறையில் நிலுவையில் உள்ள வேறு ஏதேனும் வழக்குகளின் விசாரணைக்காக தங்களை அழைக்க வேண்டியிருந்தால், பிஎன்எஸ்எஸ் சட்டம் 35(3)-வது பிரிவின் கீழ் உரிய நோட்டீஸ் வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும் நீதிமன்றத்திடம் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவில் பொதுவான நிவாரணம் கோரப்பட்டிருப்பதுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளதால், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கேட்டுக்கொண்டார்.செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.
இளங்கோ, குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் பெற்றவர்களை வேறு வழக்குகளில் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்தார். விசாரணையில் எந்தவித தலையீடும் செய்யவில்லை என்றும், சட்டப்படி நோட்டீஸ் வழங்கி விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், மனுதாரர்கள் இதுவரை சரணடைந்து அந்த முன்ஜாமீன் நடைமுறையை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார். இந்த நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என்ற பொதுவான உத்தரவை வழங்க முடியாது என்றும், பிற வழக்குகள் தொடர்பாக முன்கூட்டியே இத்தகைய உத்தரவை பிறப்பிக்க இயலாது என்றும் தெரிவித்து, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதன் மூலம் செந்தில் பாலாஜியின் கோரிக்கை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி இன்று வரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆஜராகாததால், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.