சுதந்திர தின விழா: தேசியக் கொடியேற்றத்திற்கு முன் வந்தே மாதரம் பாட நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தல் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன்படி, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற 15 புதிய நீதிபதிகளின் பதவியேற்பு நிகழ்ச்சியும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது.இந்த நிலையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும், கொடியேற்றத்திற்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நினைவை முன்னிட்டு, மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.