கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், போளுவாம்பட்டி வனச்சரகப் பகுதியில் அமைந்துள்ளது கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி. கோவையின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இங்கு, உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களில் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டிருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வெளியாகும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.