கனவு காணுங்கள்; அதை நனவாக்குங்கள்' – கலாமின் இலட்சியப் பாதையில் நடப்போம்: அண்ணாமலை அஞ்சலி
‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
அந்த பதிவில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது தமக்குப் பெரும் பாக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.மேலும், “கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்” என்ற கலாமின் வாழ்வியல் சிந்தனை, இந்திய இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டும் ஊக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அறிவியல் வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக கலாம் விதைத்த எண்ணங்கள் தலைமுறைகள் தழுவி தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.‘வளர்ந்த இந்தியா’ என்ற டாக்டர் அப்துல் கலாமின் இலட்சியத்தை நனவாக்குவது ஒவ்வொரு இந்தியரின் பொறுப்பு என்றும், அவரது உயரிய நோக்கங்களைப் பின்பற்றி வலிமையான, தன்னிறைவு பெற்ற மற்றும் உலகுக்கு முன்னுதாரணமாக விளங்கும் இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.