கஞ்சா வியாபாரி விசாரணை விவகாரம்: கோவையைச் சேர்ந்த 8 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவா?
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டியின் உத்தரவின்படி, போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனஇந்த சூழலில், தமிழக–கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடி அருகே உள்ள அகழி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (51) என்பவர் மீது போலீசார் கவனம் செலுத்தினர். பல கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவராகக் கூறப்படும் அவர், கோவை அருகேயுள்ள தடாகம் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு கஞ்சா விநியோகம் செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, தடாகம் போலீசார் கேரள மாநிலத்தின் அகழி அருகேயுள்ள புதூர் பகுதிக்கு சென்று, அங்கு தலைமறைவாக இருந்த முருகேஷிடம் விசாரணை நடத்திவிட்டு கோவைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவத்திற்குப் பிறகு, கேரள மாநில போலீசார், தங்களின் அனுமதியின்றி தமிழக போலீசார் கேரள எல்லைக்குள் வந்து விசாரணை நடத்தியது குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தடாகம் போலீசார் தேவையற்ற வகையில் தன்னிடம் விசாரணை நடத்தியதாக முருகேஷ் கேரள போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, அகழி போலீசார் கோவையைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அந்த வழக்கில் அவர்கள் போலீசார் என்று குறிப்பிடப்படாமல், "தமிழகத்தின் கோவையைச் சேர்ந்தவர்கள்" என்று மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.கேரள போலீசாரின் இந்த நடவடிக்கை கோவை மாவட்ட காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் கேரள போலீசாரின் நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.