ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம், நாமக்கல் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியதுடன், தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்ட ஆணையராக செயல்பட்டு, கிரானைட் குவாரிகளில் நடைபெற்றதாக கூறப்பட்ட பெரிய அளவிலான முறைகேடுகளை வெளிக்கொணர்ந்தவர்.தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சகாயம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தபோது, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தமக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக சகாயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பாதுகாப்பு கோரி அளிக்கப்பட்ட மனு தற்போது மறு ஆய்வுக் குழுவின் பரிசீலனையில் இருப்பதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, சகாயத்திற்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.