எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு; மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்புடன் நிறைவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பால் மக்களவையில் மீண்டும் பரபரப்பான சூழல் நிலவியது. இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.இந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நீடித்தன. குறிப்பாக, நீட் தேர்வு முறைகேடு, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை நிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.இதன் விளைவாக, அவை நடவடிக்கைகள் பலமுறை பாதிக்கப்பட்டதுடன், முக்கிய மசோதாக்கள் மற்றும் விவாதங்களும் தடைபட்டன.கூட்டத்தொடரின் இறுதி நாளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால், மக்களவையின் பணிகள் சீராக நடைபெறவில்லை. தொடர்ந்து ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, சபாநாயகர் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர், தொடக்கம் முதல் முடிவு வரை அரசியல் மோதல்களால் கவனம் பெற்றது. இதற்கு முன்பாகவும், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையில், மாநிலங்களவையிலும் அமளிக்கு மத்தியில் அவை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஹல்த்வானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தான் அரசின் செயல்பாடுகள் குறித்தே பேசியதாகவும், எந்த மதத்தையோ சமூகத்தையோ குறிப்பிட்டு பேசவில்லை என்றும் தெரிவித்தார்.தனது உரைக்குப் பிறகு, பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலர் அந்த மேடையில் யாகம் நடத்தி, அதை 'சுத்தப்படுத்தியதாக' கூறிய அவர், இது ஜனநாயகத்திற்கு ஏற்ற செயலா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அரசியலமைப்பை எவ்வாறு பாதுகாக்கப் போகிறீர்கள் என்றும் அவர் விமர்சித்தார்.இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, இந்த சம்பவம் வருத்தமளிப்பதாகக் கூறினார். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்றும் அவர் விளக்கமளித்தார்.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், அங்கு என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். கார்கேவின் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.