‘இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதே அரசின் நோக்கம்’ - அமித்ஷா
'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திலும், 'நீட்' தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவங்களுக்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 20-ஆம் தேதி அந்தக் கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்றனர். பேரணியை கட்டுப்படுத்தும் நோக்கில் பல இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். இருப்பினும் கூட்டம் அதிகரித்ததால் தடியடி நடத்தப்பட்டதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இதற்கு பதிலாக சிலர் போலீசார் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது.போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயமடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகிலுள்ள ஆர்.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தச் சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளன.
மாணவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் டெல்லி நோக்கி திரண்டுவருவதால், தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்த சூழலில், நாட்டின் இளைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவது மத்திய அரசின் உறுதியான நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பதிவில், "இளைஞர்களின் நலனையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய முன்னுரிமையாகும். வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதமர் எடுத்துள்ள முடிவு, அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. வினாத்தாள் கசிவு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்க முயல்பவர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார்.