ஆடி மாதம் தொடக்கம்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாமந்தி விலை ரூ.350 ஆக உயர்வு
சென்னை: ஆடி மாதம் நாளை தொடங்கவுள்ள நிலையில், அம்மன் கோவில்களில் நடைபெறும் கூழ் ஊற்றுதல், பொங்கல், தீமிதி உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.அதிகாலை முதலே சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்ததால் பூ விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பூ வரத்து குறைந்ததால் சாமந்தி பூவின் விலை மேலும் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.350 வரை விற்பனையாகிறது.மேலும், பன்னீர் ரோஜா ஒரு கிலோ ரூ.120-க்கும், சாக்லேட் ரோஜா ஒரு கிலோ ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெளி சந்தைகளில் சாமந்தி பூ ஒரு கிலோ ரூ.500 வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.பூ மொத்த வியாபாரிகள் கூறுகையில், ஆடி மாத கோவில் திருவிழாக்கள், ஆடி பூரம் மற்றும் ஆடி பெருக்கு போன்ற சிறப்பு நாட்கள் தொடர்ச்சியாக வருவதால், வரும் நாட்களில் பூக்களின் தேவை மற்றும் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.