அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் இன்று காலை 5.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தின் அதிர்வு மையம் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.ரிக்டர் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக, இன்று அதிகாலை அருணாசல பிரதேசத்தில் மூன்று முறை லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
அதிகாலை 3.40 மணிக்கு ரிக்டர் 2.8 அளவிலும், 3.55 மணிக்கு ரிக்டர் 3.2 அளவிலும், தொடர்ந்து 4.34 மணிக்கு ரிக்டர் 2.8 அளவிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காலை 5.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, காலை 7.17 மணிக்கு ரிக்டர் 3.5 அளவில் மற்றொரு சிறிய நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.கிழக்கு இமயமலைப் பகுதியில் காணப்படும் சிக்கலான நிலப்பிளவு அமைப்புகள் காரணமாக, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.