அமெரிக்காவில் சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாஸ்ப்ரூக் ஹைட்ஸ் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஷேக் விஜயகுமார், இணையத்தின் மூலம் சிறார் ஆபாசப் படங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் எப்.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, அவரது செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்தச் சோதனையில், 3 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் காட்சி உள்ளிட்ட 200-க்கும் அதிகமான சிறார் ஆபாசப் படங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
விசாரணையின்போது, சட்டவிரோதமான படங்களைத் தனது வசம் வைத்திருந்ததை அபிஷேக் விஜயகுமார் ஒப்புக்கொண்டார்.இந்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் நிலையில், இந்த வழக்கில் அபிஷேக் விஜயகுமாருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.