Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 25 ஆகஸ்ட் 2026 | 9 ஆவணி பராபவ வருடம்

வெறும் அரசியல் காரணங்களுக்காக ரூ.27,500 கோடி திட்டத்தை கைவிடுவதா? - கிருஷ்ணசாமி கேள்வி

வெறும் அரசியல் காரணங்களுக்காக ரூ.27,500 கோடி திட்டத்தை கைவிடுவதா? - கிருஷ்ணசாமி கேள்வி
பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு நியாயமானதாகத் தெரியவில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது:சென்னை விமான நிலையத்திற்கு மாற்றாக, ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.27,500 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசே கையகப்படுத்த வேண்டும் என்பதால், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 5,846 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதில் இதுவரை 1,802 ஏக்கர் நிலம் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.எனினும், பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்களை வழங்க முடியாது என்று கூறி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.தொழிற்பேட்டைகள், சிட்கோ, சிப்காட் மற்றும் பெரிய விமான நிலையங்கள் போன்ற திட்டங்களுக்கு பொதுவாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தேவைப்படும். அவற்றுக்கான இடங்களைத் தேர்வு செய்யும்போது, பெருநகரங்களுடனான இணைப்பு, எதிர்கால வளர்ச்சி, துறைமுகங்கள் மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற நிலத் தேர்வுகளின்போது நிலத்தின் மதிப்பு மற்றும் மக்கள் தங்கள் நிலத்தின் மீது கொண்டுள்ள பற்று காரணமாக நிலக் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு எழுவது நாடு முழுவதும் காணப்படும் பிரச்சினையாகும்.முன்பு வசதி படைத்தவர்களுக்கான போக்குவரத்தாக மட்டுமே கருதப்பட்ட விமானப் பயணம், தற்போது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து வசதியாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் நிலை உருவாகலாம். எனவே விமான நிலைய விரிவாக்கங்களை குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கான வசதியாக மட்டும் பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.பசுமை விமான நிலையங்கள் நவீன வசதிகளுடன் உருவாக்கப்படுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களுக்கான முக்கிய மையங்களாகவும் செயல்படும். மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மின் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் பெரிய விமான நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.இத்தகைய நோக்கங்களுடன் உருவாக்கத் திட்டமிடப்பட்ட பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
Advertisement
அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அப்பகுதி மக்களை சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தது வேறு விஷயம். ஆனால், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், திட்டத்திற்கான நிலக் கையகப்படுத்தலில் சுமார் 75 சதவீத பணிகள் முடிந்த நிலையில் அதை ரத்து செய்வது, தமிழ்நாட்டுக்கு வரவிருந்த மிகப்பெரிய திட்டத்தை இழக்கச் செய்வதாகாதா என்று கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இந்திய விமான நிலைய ஆணையம் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்று இடம் முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தால், பரந்தூர் திட்டத்தை ரத்து செய்வதில் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால், மாற்று இடமே முடிவு செய்யப்படாத நிலையில் திட்டத்தை கைவிட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் எல்லைப் பகுதிகளுக்கு அருகே ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்கள் புதிய விமான நிலையங்களை அமைத்து வருகின்றன. இந்நிலையில், ரூ.27,500 கோடி மதிப்பிலான விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது சர்வதேச தொழில் முதலீடுகள் மற்றும் வளர்ச்சியை எதிர்பார்ப்பவர்களுக்கு தவறான செய்தியை அளிக்காதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், இவ்வளவு பெரிய விமான நிலையத் திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் அவை முழுமையாக பயன்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட பிறகு, சென்னைக்கு அருகிலேயே சுமார் 5,000 ஏக்கர் நிலத்தை, அதுவும் நீர்நிலைகள் இல்லாத மற்றும் விவசாயத்திற்கு ஏற்றதாக இல்லாத தரிசு நிலமாக கண்டுபிடிப்பது எப்படி சாத்தியமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.பரந்தூர், ஏகனாபுரம் பகுதியை போலவே மாற்று இடத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினால், அப்போது என்ன திட்டத்தை செயல்படுத்த முடியும்? தமிழ்நாட்டுக்கு வரவிருந்த ரூ.27,000 கோடி மதிப்பிலான பசுமை விமான நிலையத் திட்டம் வெறும் கனவாகவே மாறிவிடாதா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்வளவு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம் என்றும் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே முதல்-அமைச்சர் விஜய் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருப்பது நியாயமாகத் தெரியவில்லை. இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு