பரமக்குடி அருகே பிடாரிசேரி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த செம்மறி ஆடுகள் மீது லாரி மோதியதில் 50 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்லூரணியைச் சேர்ந்த கேசவனுக்குச் சொந்தமான இந்த ஆடுகள், அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பார்த்திபனூரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி கருவேல மரத்தூள் ஏற்றிச்சென்ற லாரி, ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் மீது மோதியதாக தெரிகிறது.
Advertisement
இந்த விபத்தில் 50 செம்மறி ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. உயிரிழந்த ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிமையாளர் கேசவனுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் அர்ஜுனனை பார்த்திபனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.