தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பினர் சந்திப்பு
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை, ‘ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல்’ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நேரில் சந்தித்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைக்கும் நடவடிக்கைகள் மற்றும் தமிழர் தாயகக் கோட்பாட்டை பாதிக்கும் இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான குரலாக இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 10 பெண்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தமலர் அந்தோனிஜோன்சன், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஸ்மணரஜனி ஜெயப்பிரகாசி, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிந்துஜா சௌயன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதாம்பிகை விக்கினேஸ்வரன், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜா குகநேசதாசன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பற்றீசியா அலெக்ஸ், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வன்செலீன் கந்தசாமி மற்றும் சுபதர்சினி சச்சிதானந்தம், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஜமுனா சந்திரகுமார் மற்றும் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் ஆகியோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.