ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக உழவர் அங்காடியில் திடீர் தீ விபத்து; பொருட்கள் சேதம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுய உதவிக்குழுவினர் சார்பில் உழவர் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து ஏற்பட்டபோது அங்காடியில் பணியாற்றியவர்கள் உடனடியாக வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.முதற்கட்ட விசாரணையில், சமையல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து தீப்பற்றியதாக தெரியவந்துள்ளது.
தீயணைப்புத் துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், அங்காடியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.