மாமல்லபுரத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி 4 பேர் பலி...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.போர்வெல் குழாயை பொருத்தும் பணியின் போது, நீளமான உபகரணம் மேலே சென்ற மின்கம்பியில் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் உயர் மின்னழுத்தம் பாய்ந்து, பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்துக்கான காரணம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் ஏதேனும் அலட்சியம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களில் மின் பாதுகாப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.