மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ ஓட்டுநர் உரிமம் ரத்து? மகாராஷ்டிர அரசின் புதிய விதி அமல்
மகாராஷ்டிராவில் ஆட்டோ, டாக்சி மற்றும் செயலி வழியாக இயங்கும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பயணிகளுடன் உரையாடும் அளவுக்கு மராத்தி மொழி அறிவு இல்லாத ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய விதிகளின்படி, தேவையான அளவு மராத்தி மொழி தெரியாத ஓட்டுநர்களின் உரிமம் முதற்கட்டமாக 3 மாதங்கள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம். தொடர்ந்து விதிமுறைகளை மீறினால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த நடைமுறை வருகிற 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதற்காக மகாராஷ்டிர மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்தத் திருத்தத்தின்படி, ஆட்டோ, டாக்சி மற்றும் மீட்டர் வசதியுடன் செயல்படும் செயலி அடிப்படையிலான வாடகைக் கார் ஓட்டுநர்கள் பணிக்குத் தேவையான அளவுக்கு மராத்தி மொழி அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் கூறுகையில், பயணிகளுடன் சரியான முறையில் தொடர்பு கொள்ளவும், அவர்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளவும் உள்ளூர் மொழி அறிவு முக்கியமானது என்றார்.
மேலும், பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்கும் இது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.மராத்தி மொழி தொடர்பான விதிமுறைகளில் இருந்த சில தெளிவின்மைகளை பயன்படுத்தி, சில ஓட்டுநர்கள் இதுவரை நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்ததாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.வருகிற 18-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், அதற்கான காரணங்களை பதிவு செய்து ஓட்டுநர் உரிமம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், மும்பையில் உள்ள தார்டியோ வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மராத்தி மொழித் தேர்வில் பங்கேற்க ஏராளமான ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் திரண்டனர்.