மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
திரிணமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி எம்.பி. மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.அபிஷேக் பானர்ஜி, அமலாக்கத்துறை மற்றும் மாநில போலீசின் சி.ஐ.டி. விசாரணைக்கு உட்பட்டுள்ளார். இந்த நிலையில், கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி அவர் கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில், நீதிபதிகள் ஜோய் மால்யா பக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் முடிவில், அபிஷேக் பானர்ஜி 3 வாரங்களுக்கு வெளிநாடுசென்று சிகிச்சை பெற நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.அதேவேளை, அவரது வெளிநாட்டுப் பயணம் தொடர்பான முழுமையான திட்டம், செல்லும் நாட்டில் தங்கும் உள்ளூர் முகவரி, சிகிச்சை பெற உள்ள மருத்துவமனை விவரங்கள், தங்கும் காலம் மற்றும் விமானப் பயண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.இந்த விவரங்கள் அனைத்தும் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.