மன அழுத்தத்தால் விபரீத முடிவு... மாடல் அழகி தூக்குப்போட்டு தற்கொலை
உடுப்பி அருகே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் மாடல் அழகி கிருதி பங்கெரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுப்பி மாவட்டம் கல்மடி பகுதியைச் சேர்ந்தவர் கிருதி பங்கெரா (27). இவர் ஏற்கனவே ஓட்டலில் பணியாற்றி வந்த நிலையில், மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்தார். மணிப்பாலில் உள்ள ஓட்டல் பணியை ராஜினாமா செய்த அவர், கடந்த ஒரு மாதமாக தனது தாய் மற்றும் சகோதரியுடன் கல்மடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்ட கிருதி பங்கெரா, பின்னர் செல்போனில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது தாயை தள்ளிவிட்டு, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிய அவர், படுக்கையறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.இதுபோன்று ஏற்கனவே அவர் கூறியிருந்ததால், அவரது தாய் இந்த முறை அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.
ஆனால் நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் கிருதி பங்கெரா உயிரிழந்து கிடந்தார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.கடந்த சில நாட்களாகவே கிருதி பங்கெரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரி மல்பே போலீசில் புகார் அளித்தார்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கிருதி பங்கெராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.