மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளம் பெண் மருத்துவர் உயிரிழப்பு
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 24 வயதான லாவண்யா, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு, தற்போது முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் (PG) பயின்று வந்தார். அவருக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு திவாகரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றிருந்தது.இந்த நிலையில், மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த லாவண்யா, நீண்ட நேரமாக தனது அறையை விட்டு வெளியே வராததால் சக மாணவர்கள் சந்தேகமடைந்தனர். பின்னர் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமணமாகி ஓராண்டுக்குள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் (RDO) தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.ஆரம்பக்கட்ட தகவலின்படி, குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் விசாரணை முடிவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.