பெங்களூருவில் ஓடும் காரில் திடீர் தீ: அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்
பெங்களூரு கோரமங்களா பகுதியில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் பயணித்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அகர்-சர்ஜாபுரா சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோரமங்களா பகுதியில் உள்ள வாட்டர் டேங்க் சந்திப்பு அருகே நேற்று அதிகாலை ஒரு கார் சென்று கொண்டிருந்தது. டிரைவர் உள்பட 3 பேர் அந்த காரில் பயணம் செய்தனர். அப்போது சந்திப்பு அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.இதைக் கவனித்த டிரைவர் உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்தினார். காரில் இருந்த 3 பேரும் அவசரமாக கீழே இறங்கினர். அவர்கள் வெளியேறிய சில நிமிடங்களில் காரின் முன்பகுதியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.இதையடுத்து காரின் உரிமையாளர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காரின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், தீயில் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடு போல் மாறியது.கார் தீப்பிடித்ததால் அகர்-சர்ஜாபுரா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோரமங்களா போலீசார், தீயில் சேதமடைந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.