கர்நாடகாவில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
கர்நாடகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 8 மாதங்களில் மாநிலம் முழுவதும் 4,125 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, நோய் பாதித்தவர்கள் முகக்கவசம் அணிவதுடன், பிறருடன் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பருவகால காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், பன்றிக்காய்ச்சலும் வேகமாக பரவி வருவது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள். பெருநகர பெங்களூரு ஆணைய எல்லையில் 2,033 பேரும், பெங்களூரு நகரில் 982 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மைசூருவில் 184 பேர், உடுப்பியில் 293 பேர், தட்சிண கன்னடாவில் 87 பேர், பல்லாரியில் 51 பேர், பெலகாவியில் 45 பேர், மண்டியாவில் 31 பேர், பெங்களூரு புறநகரில் 26 பேர், ஹாவேரியில் 26 பேர், பெங்களூரு தெற்கில் 26 பேர், சாம்ராஜ்நகரில் 20 பேர், சிவமொக்காவில் 91 பேர், உத்தரகன்னடாவில் 41 பேர், தாவணகெரேயில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பன்றிக்காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடக சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
நோய் பாதித்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்யவும், வெந்நீர் குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், கைகளால் மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதையும், நோய் அறிகுறிகள் இருக்கும் நிலையில் பிறருடன் கைகுலுக்குவதையும் தவிர்க்க வேண்டும். நோய் பாதிப்பு இல்லாதவர்களும் கைகுலுக்குவதை தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.பன்றிக்காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவர் ஆலோசனையின்றி சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைவரும் தனித்தனியாக கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் என்றும் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.கர்நாடகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.