மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 17-ந்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 11-ந்தேதி தொடங்கிய நிலையில், கோவில் வடக்காடி வீதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, 400 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி பூஜைகளை நடத்தி வருகின்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள், மூலவர் சன்னதிகள் மற்றும் கொடிமரங்கள் உள்ளிட்ட பகுதிகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளன. இதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து சுமார் 5 டன் மலர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் சம்பங்கி, சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு நிற அரளி, இருவாச்சி, மஞ்சள், வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி, பல்வேறு வண்ணங்களில் ஆந்தூரியம் உள்ளிட்ட மலர்கள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
நீண்ட நேரம் வாடாமல் இருந்து நறுமணம் வீசும் தன்மை கொண்ட மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோவிலுக்கு வந்துள்ள மலர்கள் தற்போது புதுமண்டபத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாலைகளாக தொடுக்கும் பணியில் 50 பேர் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக நான்கு ராஜகோபுரங்களுக்கும் சுமார் 175 அடி உயரத்தில் மலர் மாலைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து இறுதிக்கட்டமாக மூலவர் சன்னதி மற்றும் கொடிமரம் அமைந்துள்ள பகுதிகளில் மலர்களால் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகத்துக்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.