நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கூட்டத்தொடர் ஆரம்பமான நாள் முதல் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மக்களவையில் இதுவரை கேள்வி நேரம் முழுமையாக நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய மக்களவை அமர்விலும், நீட் தேர்வு முறைகேடு குற்றச்சாட்டுகள், மாணவர் போராட்டங்களில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் ராமர் கோவில் நன்கொடை தொடர்பான விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடி நடவடிக்கையையும், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகளையும் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.மேலும், ராமர் கோவில் நன்கொடைகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டும் வகையில், ஒரு நன்கொடைப் பெட்டியை அடையாளமாக வைத்து அதன் சுற்றிலும் நின்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை முன்னிறுத்தி இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி நீடித்து வரும் சூழலில், கூச்சல் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியிலேயே பல சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.