தேசிய கைத்தறி தினம்: கைத்தறி ஆடைகளுடன் வீடியோக்களை பகிருங்கள் – இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி ஆடைகள் மற்றும் பொருட்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்ந்து இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கைத்தறித் துறைக்கு முக்கிய இடம் உண்டு. சுதந்திரப் போராட்டத்தின் போது உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கில் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. அந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரவும், கைத்தறி பொருட்களின் சிறப்பை எடுத்துரைக்கவும், 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள காணொளியில், கைத்தறி ஆடைகளை அணிந்து அல்லது கைத்தறி பொருட்களை பயன்படுத்தி GRWM உள்ளிட்ட வீடியோக்களை உருவாக்கி, #NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பகிருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.அந்தக் காணொளியில், 1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ஒன்றுபட்ட நாளாக ஆகஸ்ட் 7 அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பல்வேறு கைத்தறி பாரம்பரியத்தை உலகளவில் பிரபலப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.மேலும், தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவது நாட்டின் இலக்கு என்றும், அதற்காக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களும் முன்னேற வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கைத்தறி பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும், பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு, நெசவாளர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கும் ஆதரவாக அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.இதற்கிடையில், தனது எக்ஸ் (X) தளப் பதிவிலும் தேசிய கைத்தறி தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, இந்திய நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார். தலைமுறை தலைமுறையாக அவர்கள் நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாத்து வளர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், கிராமப்புற முன்னேற்றம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதில் கைத்தறித் துறை முக்கிய பங்காற்றுகிறது என்றும், இந்தத் துறைக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.இறுதியாக, தங்களுக்குப் பிடித்த கைத்தறி பொருட்கள் மற்றும் GRWM வீடியோக்களை #NationalHandloomDay ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கைத்தறித் துறையினருக்கு ஊக்கமளிக்குமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.