தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்பனைக்கு தடை
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 11 வகையான மதுபானங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 10 வகை பிராந்தி மற்றும் ஒரு வகை ரம் இடம்பெற்றுள்ளன.இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில், இந்த மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மறு உத்தரவு வெளியாகும் வரை இந்தப் பொருட்களை எந்தக் கடையிலும் விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துவதுடன், அவற்றை நுகர்வோருக்கு வழங்கக் கூடாது என்று விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்த 11 வகை மதுபானங்களை கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்றவர்களுக்கு அவற்றை விற்பனை செய்யக் கூடாது என்றும் அதிகாரப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்டுள்ள மதுபானங்களில் LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY, McDowells VSOP Brandy, NO.1 McDowells Fine Brandy, MENSCLUB Deluxe Brandy, HONEY BEE FINE Brandy, ENRICA PLATINUM RESERVE XO BRANDY, ENRICA PREMIUM FRENCH BRANDY மற்றும் ENRICA OLD INDIE CLASSIC DARK RUM உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.