சென்னை எண்ணூர் அருகே கடலில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்களில் ஒருவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர் பிளஸ்-1 படித்து வந்த 15 வயது சிறுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை நண்பருடன் எண்ணூர் பெரியக்குப்பம் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த பலத்த அலை இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு இருவரையும் கரைக்கு கொண்டு வந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர்களில் ஒருவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Advertisement
மற்றொரு மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் நேரங்களில் கடலில் இறங்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.