சாத்தானின் ஆட்சி எது என்பதை மக்களே அறிவார்கள்: மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி
முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பதிலடி அளித்துள்ளது. இதுகுறித்து தவெக ஐடி விங் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.அந்தப் பதிவில், அரசியலை வணிகமாக மாற்றியுள்ளதாக திமுக மீது குற்றம்சாட்டியுள்ள தவெக, அக்கட்சி தனது பேச்சாளர்களின் மூலம் வெறுப்புணர்வை தூண்டி வருவதாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களை எதிர்க்கட்சியின் ஜனநாயக உரிமை என திமுக விளக்குவதாகவும் விமர்சித்துள்ளது.மேலும், திமுகவின் உயர்மட்டத் தலைமையிலிருந்து கீழ்மட்ட நிர்வாகிகள் வரை நாகரிகமற்ற அரசியல் நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும், இதனை தமிழக மக்கள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மக்களின் நலனைப் புறக்கணித்து அதிகார ஆணவத்துடன் திமுக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தியபோதும் ஜனநாயக மரபுகளை மதிக்காமல் செயல்பட்டதால்தான் தற்போது அதன் விளைவுகளை திமுக எதிர்கொண்டு வருவதாக தவெக கூறியுள்ளது.
இருப்பினும், அதிகார செருக்கு குறையாமல், காவல்துறையையே பகிரங்கமாக எச்சரிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், "சத்திய ஆட்சி எது, சாத்தானின் ஆட்சி எது என்பதை மக்களே அறிவார்கள்" என்றும் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், அடிப்படை புரிதலின்றி வழக்குகள் தொடரப்பட்டதாகவும், அதுதொடர்பாக உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததை மறந்துவிட்டு திமுக தற்போது பிறருக்கு அறிவுரை வழங்குவதாகவும் தவெக விமர்சித்துள்ளது. நீதிநெறியைப் பின்பற்றாமல் அரசியல் நடத்தும் திமுக, தனது செயல்களின் விளைவுகளை விரைவில் மேலும் சந்திக்க நேரிடும் என்றும் அந்த எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.