கேரள வெள்ளத்தில் முதியவரை காப்பாற்றி உயிர்நீத்த நீச்சல் வீரர் ராஜேஷ்
கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின்போது, 61 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரையே தியாகம் செய்த நீச்சல் வீரர் ராஜேஷின் செயல் பலரையும் உருகச் செய்துள்ளது.திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 36 வயதான ராஜேஷ், தொழில்முறை நீச்சல் மற்றும் சாகசப் பயிற்சியாளராக இருந்தார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி கண்ணூரின் மீந்துள்ளி பகுதியில் ஓடும் காரியங்கோட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், பென்னி என்ற 61 வயது முதியவர் சிக்கிக் கொண்டார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நண்பர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்ற ராஜேஷ், வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த முதியவரை மீட்பதற்காக தயக்கமின்றி ஆற்றில் இறங்கினார். உயிர் காக்கும் ஜாக்கெட்டை தானே கழற்றி முதியவருக்கு அணிவித்ததால், அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
ஆனால், அதன்பின் ஏற்பட்ட கடும் நீரோட்டத்தில் ராஜேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், மூன்று நாட்கள் கழித்து ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது.2018-ஆம் ஆண்டு கேரள வெள்ளம் மற்றும் 2024-ஆம் ஆண்டு வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய அனுபவமுள்ளவராக ராஜேஷ் அறியப்பட்டார். பிறர் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரையே அர்ப்பணித்த அவருக்கு கேரளம் முழுவதும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.