குர்கானில் கனமழை: பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள், நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தல்
டெல்லி அருகே உள்ள குர்கானில் திங்கட்கிழமை ஒரே நாளில் சுமார் 75 மி.மீ. மழை பதிவானது. கனமழையால் நகரின் பல முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.சிக்னேச்சர் டவர் முதல் ஹீரோ ஹோண்டா சவுக் வரையிலான சாலையில் வழக்கமாக 15 நிமிடங்களில் கடக்கக்கூடிய தூரத்தை கடக்க சுமார் 50 நிமிடங்கள் ஆனது. சுபாஷ் சவுக் பகுதியில் பள்ளிப் பேருந்துகள் பல மணி நேரம் வெள்ளநீரில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றவும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும் குர்கான் மாவட்ட ஆட்சியர் உத்தம் சிங் அவசர ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.டெல்லி-ஜெய்ப்பூர் விரைவுச்சாலை, சைபர் ஹப் பகுதியை ஒட்டிய பகுதிகள், ராஜீவ் சவுக், இப்கோ சவுக், சீத்லா மாதா சாலை, சுபாஷ் சவுக் மற்றும் பசை சாலை உள்ளிட்ட பகுதிகள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இன்று குர்கானில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கலாம். நாளை முதல் மழையின் தாக்கம் குறைந்து, வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், நீர்நிலைகள் மற்றும் வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் போக்குவரத்து போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.