உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டம்: ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வரும் நிலையில், ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு அளித்து வருகிறது.
இந்த நிலையில், உக்ரைன் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள ரஷ்யாவின் ராணுவ மனிதவள பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், மேலும் 30 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த 30 ஆயிரம் வீரர்களை வரவேற்கும் பணிகள் ரஷ்யாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள வொரோனேஷ் பிராந்தியத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரமாக நடைபெற்று வருவதாக உக்ரைன் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ஏற்கனவே 14 ஆயிரம் வடகொரிய வீரர்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ராணுவ வீரர்களை மட்டுமல்லாமல், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக வடகொரியாவில் தயாரிக்கப்பட்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்களையும் ரஷ்யாவுக்கு வடகொரியா வழங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.ரஷ்யாவுடன் இணைந்து போரில் பங்கேற்பதன் மூலம், வடகொரிய ராணுவத்தினர் நவீன ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் மின்னணு போர் நுட்பங்களில் நேரடி அனுபவம் பெறுகின்றனர் என்றும், இது உக்ரைனுக்கு மட்டுமல்லாமல் வடகொரியாவின் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பாதுகாப்புக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.