ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி மாதத்தில் இணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்தது. அதன் பின்னர், உலகின் முக்கிய கடல் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. மேலும், அந்த வழியாகச் சென்ற கச்சா எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனுடன், மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள பகுதிகளையும் ஈரான் குறிவைத்து தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரானின் ராணுவ மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.இதன் காரணமாக, அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
Advertisement
அந்த வகையில், இன்று 13-வது நாளாகவும் அமெரிக்கா தனது தாக்குதலை தொடர்ந்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: "ஈரான் இதுவரை போதுமான பாதிப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே, அதற்கு எதிராக இன்னும் பெரிய அளவிலான, மிகவும் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ள உத்தரவிட உள்ளேன்" என்றார்.மேலும், ஈரான் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கான கடுமையான விளைவுகளை ஈரானும் ஹவுதி அமைப்பும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.