இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!
இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று அதிகாலை 3.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மையப்பகுதி 32.925 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 76.145 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்ததாக முதற்கட்டமாக கணிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, லடாக்கின் லே பகுதியில் இன்று காலை 8.25 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 36.700 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 74.343 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.