இமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு
இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பைரகார் நகரில் இருந்து சம்பா நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 7.15 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. பைரகார்-டிஸ்சா சாலையில் உள்ள ஆபத்தான 27 கி.மீ. மலைப்பாதையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாலையோரமாக பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் உதவி கேட்டு அலறியுள்ளனர்.
சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.