தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். டெங்கு பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், நோயைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை அலட்சியம் காட்டியதே உயிரிழப்புகளுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
காலநிலை மாற்றத்தின் காரணமாக தொற்றுநோய்களின் தாக்கம் அதிகரித்த பிறகு நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, நோய் பரவுவதற்கு முன்பே தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையை அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பை கருத்தில் கொண்டு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துவதுடன், டெங்குவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறைக்கும், தவெக அரசுக்கும் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில், டெங்கு பரவல் தொடர்பாக பொதுமக்களும் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.