கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தங்கம் கடத்தல் வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் தொடர்புடையதாக கூறப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட சுவப்னா சுரேஷ், 15 மாதங்கள் சிறையில் இருந்த பின்னர், 2021-ம் ஆண்டு முதல் ஜாமீனில் உள்ளார். இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுவப்னா சுரேஷ் கூறியதாவது: தங்கம் கடத்தல் வழக்கின் விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டால், தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கில் ஒருவரை மட்டும் விசாரிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும், தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஊழல் விவகாரங்களை வெளிக்கொண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
பினராயி விஜன் மீது நடவடிக்கை எடுக்க தற்போதைய முதல்-மந்திரி வி.டி. சதீசன் தயாராக வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அது சமூகத்தில் வேறு விதமான விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்றும் சுவப்னா சுரேஷ் கூறினார். தங்கம் கடத்தல் வழக்கில் தன்னை பயன்படுத்தியதைப் போல, தற்போதைய வழக்கிலும் விரைவில் புதிய நபர் ஒருவர் முன்னிலைக்கு வருவார் என்றும் அவர் தெரிவித்தார். தங்கம் கடத்தல், டாலர் கடத்தல், சி.எம்.ஆர்.எல்., எக்சாலோஜிக் உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சுவப்னா சுரேஷ் கூறினார்.