1,400 ஏக்கர் நாற்றுகள் கருகும் அபாயம்: டெல்டா மாவட்டங்களில் பாசன தட்டுப்பாடு
டெல்டா மாவட்டங்களில் போதிய பாசன நீர் கிடைக்காததால், சுமார் 1,400 ஏக்கரில் நடவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள நெல் நாற்றுகள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா ஆகிய இரு பருவங்களிலும் நெல் சாகுபடி முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த பருவங்களில் விளையும் நெல்லில் பெரும்பகுதி, அரசின் உணவு தானிய திட்டத்துக்காக கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. சம்பா சாகுபடிக்காக கடந்த 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 45 நாட்களுக்கு நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.