விவாகரத்து கோரி தலிபான் ஆளுநரிடம் முறையிட்ட 18 வயது பெண்; வெளிவரும் பெண்களின் அவல நிலை
ஆப்கானிஸ்தானில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 18 வயது பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு தலிபான் ஆளுநரிடம் முறையிட்ட சம்பவம் பெண்களின் நிலை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், அந்த பெண்ணின் விவாகரத்து கோரிக்கையை ஆளுநர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆளுநர் அப்துல்லா சர்ஹாதியின் அலுவலகத்தில் சிறுவன் ஒருவரின் உடைந்த கைக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிதியுதவி வழங்கப்பட்டதாகவும், உள்ளூர் மசூதியின் மேம்பாட்டிற்கும் பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் நடைபெற்ற மற்றொரு சம்பவம் தலிபான் ஆட்சியில் பெண்கள் எதிர்கொள்ளும் சூழலை வெளிப்படுத்தியுள்ளது.முகத்தை முழுமையாக மறைத்தபடி, கண்ணாடி அணிந்து தலிபான் அலுவலகத்துக்கு வந்த 18 வயது பெண் ஒருவர், தனது கணவர் பல மாதங்களாக தன்னை அடித்தும், உதைத்தும், பணம் கேட்டும் துன்புறுத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். இதனால் அவருடன் தொடர்ந்து வாழ முடியாது என்றும், உடனடியாக விவாகரத்து பெற்றுத் தர வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.ஆனால், விவாகரத்தை வழங்குவதற்கு பதிலாக கணவருடன் இணைந்து வாழுமாறு ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணின் கோரிக்கையையும் அவர் ஏற்க மறுத்துள்ளார். கணவருடன் இனி வாழ முடியாது என்றும், தனது மரியாதையை ஏற்கனவே இழந்துவிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து முடிவை கைவிடுமாறு ஆளுநர் அறிவுறுத்தியபோதும், அந்த பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இஸ்லாமிய சட்ட நடைமுறையின்படி, திருமணத்தின்போது கணவர் வழங்கிய பணத்தை விவாகரத்து பெறும் மனைவி திருப்பி வழங்க வேண்டும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமணத்தின்போது வழங்கிய தொகையைவிட நான்கு மடங்கு பணத்தை வழங்க வேண்டும் என கணவர் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.இந்த விவகாரம் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு தனி அறை வழங்க வேண்டும் என்றும், அவரை அடிக்கவோ துன்புறுத்தவோ கூடாது என்றும் கணவரிடம் ஆளுநர் கூறியதாக தெரிகிறது. இந்த உத்தரவை மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.எனினும், விவாகரத்து பெறுவதில் அந்த பெண் தொடர்ந்து உறுதியாக இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த ஆளுநர், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவர்கள் சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள் என கூறியதாகவும், அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் சிரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தான் அரசை அகற்றி தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பின்னர் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வேலைவாய்ப்புகளிலிருந்தும் அவர்கள் விலக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 18 வயது பெண் ஒருவர் விவாகரத்து கோரி தலிபான் ஆளுநரிடம் முறையிட்ட சம்பவம், அந்நாட்டில் பெண்களின் உரிமைகள் மற்றும் குடும்ப வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.