விஜயகாந்த் கதையை முடித்தவர் வைகோ , விஜய் பார்த்து இருக்கவும்.-ஆர்.பி உதயகுமார்
விஜயகாந்தின் அரசியல் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் வைகோ; விஜய்யின் நிலையும் அதேபோல் ஆகலாம் என ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திமுக மற்றும் அதிமுகவை தோற்கடித்து தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியை அமைத்துள்ளது. தேர்தலுக்கு பின் அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்துவரும் நிலையில், இரு கட்சிகளின் நிர்வாகிகள் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்தச் சூழலில், மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தவெக கூட்டணியில் மதிமுக இணைந்திருப்பதை கடுமையாக விமர்சித்தார்.
ஊழலை ஒழிக்க வந்த அவதார புருஷன், மகாத்மா என்று முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராம் மூலம் கன்டென்ட் கிரியேட்டர்கள் பரப்பி வருகிறார்கள். விஜய் யார் தெரியுமா என்று கேட்கிறார்கள். தெரியாதுப்பா நீங்களே சொல்லுங்க. தவெக கூட்டணியில் மதிமுக இணைந்துவிட்டது. வைகோ இருப்பதால் இனி கவலைப்பட வேண்டாம். விஜய்யை முடிக்காமல் அவர் விட மாட்டார். முடித்துவிட்டு தான் அடுத்த வேலை செய்வார்.
பேரறிஞர் அண்ணாவுக்கு கேடயமாக இருந்தேன், கலைஞருக்கு கவசமாக இருந்தேன், புரட்சி தலை அம்மாவுக்கு நான் போர்வாளாக இருந்தேன், ஸ்டாலின் ஆட்சியை காப்பாற்றுவதற்கு கருணாநிதியிடம் சத்தியம் செய்தேன் என்கிறார்.
விஜய்யை காப்பாற்றுவதற்கு யாரிடம் சத்தியம் செய்தார். அதிமுகவுடன் திமுக கூட்டணி வைத்தது தவறு என்று தவெக உள்ளிட்ட அனைவரும் கூறுகிறார்கள். வைகோவுடன் தவெக கூட்டணி வைத்தது தான் தவறு என்பதை விஜய் உணர்வார்.
பாவம் விஜயகாந்த் நன்றாக இருந்தார். கிட்டத்தட்ட 12 சதவிகிதம் வங்கி வைத்திருந்தார். அவரை நீங்கள் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்குங்கள் என்று கூறி அழைத்தது வைகோ. உடம்புக்கு முடியாதவரை ஊர் ஊராய் கூட்டி சென்று பேச வைத்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் விஜயகாந்தை முதலமைச்சராக்குவோம் என்று துடித்தனர்.
தேர்தல் முடிந்ததும் பாவம் அந்த மனிதர் செத்தே போய்விட்டார். கதையை முடித்துவிட்டதே அவர் தான். வைகோ அவர்களே நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் போர் செய்யுங்கள், யாருக்கு வேண்டுமானாலும் கவசமாக இருங்கள். எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. விஜய்யை கொஞ்சம் பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு கவசமாக இருந்துவிட போகிறார்" என்று கிண்டலாக பேசினார்.